Friday, September 28, 2012

நிழல் போன்றவன்



சூரியன் உன் தாமரை
நிலா உன் அல்லி

பிரபஞ்சத்தினும்
பெரிது உன் அழகு
என் அறிவோ
எறும்பின் கண்

உன்
அழகின் வருணனைகள்
அலுப்பூட்டும் போது
உன் அழகு அன்றி
ஆறுதல் வேறு ஏது?

நீ
முகம் திருப்பிச்
செல்லும் போதெல்லாம்
என் முகத்தில் விழுகிறது
இருளின் திரை

காதல்
உனக்கு மின்மினி
எனக்கோ
காட்டுத் தீ

காதல்
உனக்கொரு பெயர்
எனக்கோ
சரிதை


விளக்கு
விட்டில்
பழைய படிமம்
என்கிறார்கள்...
எரிதல்
அப்படியாய் இல்லை

நிழலற்ற உனது
நிழல் போன்றவன்
நான்

ஒருபோதும் உன்னை
அடையவே முடியாதெனில்
உன்னின் வேறாய் இருப்பதில்
என்ன நியாயம் இருக்கிறது?

உன் பார்வை
விரிவானம்
உன் மூச்சு
சிறகுகளைத் தாங்கும்
காற்று

நீயின்றி இயலாது
கவிதைகள் எழுத
எனினும்
எந்தக் கவிஞனும்
எழுத முடியாத
கவிதை நீ



காதலின்
ஊற்றுக்கண்ணில்
உன்னைச் சந்தித்து
தாகமுடன் திரும்புகிறேன்
ஒவ்வொரு முறையும்

இரவெல்லாம்
உன் நினைவும்
உன் கனவும்
சக்களத்திச் சண்டையிடும்
வீடு நான்

நீயே உன்னை
வருணித்த பாடல்
என்
பாதாதி கேசம்

பருவங்களில் நான்
பாலை ஆனாலும்
சோலை ஆனாலும்
நீங்காத
நிலத்தடி நீர்
நீ

a

Thursday, September 27, 2012

எறும்பின் கண் (தொடர்ச்சி-5)



அல்லாமா இக்பாலின் இன்னொரு கவிதை இயற்கையில் மனிதனின் இடத்தையும் சூரியனின் இடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது. ”இன்சான் அவ்ர் பஸ்மெ குத்ரத்” (மனிதனும் இயற்கையின் சபையும்) என்னும் அக்கவிதையிலும் மேலே நாம் கண்டுவந்த விஷயங்களைக் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார். இக்கவிதையில் மனிதனின் அகமியம் எத்தனை மகத்துவமானது என்பதன் பக்கம் நம் கவனத்தை ஈடுபட வைக்கிறார்:

“ஒளிரும் பரிதியை விடியலில் கண்டேன்
உள்ளமையின் தோட்டத்திடம் இவ்வாறு கேட்டேன்:

’சூரியச் சுடர்களின் மூச்சிலிருந்தே ஒளிர்கின்றாய் நீ
உன் நதிகளின் நீர் உருகிய வெள்ளி போல் உள்ளது

கதிரவன் உன் முகத்தை
ஒளியின் நகை கொண்டு அலங்கரித்துள்ளான்
அந்த மெழுகுவத்தியே
உன் சபையைப் பிரகாசம் ஆக்கியுள்ளது

உன் ரோஜாவும் ரோஜாத் தோட்டமும்
சொர்க்கத்தின் சித்திரங்களாய் உள்ளன
இவை அனைத்தும்
’வஷ்ஷம்ஸ்’ அத்தியாயத்தின் விளக்கங்களாய் உள்ளன

உன் பூக்களின் ஆடை சிவப்பாகவும்
மரங்களின் ஆடை பச்சையாகவும் உள்ளது
உன் அவையின் தேவதைகளில்
சிலர் சிவப்பு சிலர் பச்சை போலும்

கீழ்வானில் செம்மேகங்கள் தோன்றும் போது
அது உன் கூடாரத்தின் பொன் விளிம்பாகிறது

அந்தியின் சிவப்பு
கண்களுக்கு எத்தனைக் களிப்பு!
ரோஜா நிற மதுவை
மாலையின் கோப்பையில் ஊற்றிவிட்டாய்!

உன் மதிப்பும் மகத்துவமும் பெரிது
உன் ஒளித்திரையால் போர்த்தப்பட்டுள்ளன
ஒவ்வொரு பொருளும்

வைகறை உன் மகத்துவத்தின்
கேசாதி பாத வருணனை!
இருளின் சுவடுகூட இல்லை
சூரியனின் கீழே

இவ்வொளியின் நகரத்தில்
நானும் வசிக்கிறேன் எனினும்
என் விதியின் நட்சத்திரம்
பொசுங்கி வீழ்ந்தது ஏன்?

ஒளியை விட்டும் தொலைவாக
இருளின் கைதியாய் இருக்கின்றேன்
நான் ஏன் இத்தனைப் பரிதாபமாய்,
கதியிலியாய், பாவியாய் இருக்கின்றேன்?’

இப்படி நான் புலம்பி இருக்கையில்
எங்கிருந்தோ வந்ததொரு குரல்
வானின் விளிம்பில் இருந்தோ
அல்லது பூமிப் பரப்பில் இருந்தோ

’என் இருப்பும் தோற்றமும்
உன் ஒளியைச் சார்ந்தே உள்ளன
பிரபஞ்சமெனும் ரோஜாத் தோட்டத்தின்
தோட்டக்காரன் நீயே

அழகின் கூட்டம் நீ
நான் உன் நிழற்படம்!
காதலின் வேதம் நீ
உன் விளக்கவுரை நான்!

என் அலங்கோல நிலைகளைத்
திருத்தி அமைத்தவன் நீ
என்னால் இயலாத சுமையைத்
தோளில் ஏற்றவன் நீ

என் இருப்போ
சூரிய ஒளியின் யாசகன்
அந்தச் சூரியனின் தேவை இன்றி
ஒளி வீசுபவன் நீ!

சூரியன் இல்லை எனில்
என் பூக்காடு வெறும் சாக்காடு
வாழ்விடம் என்னும் என் பெயர்
சிறைக்கூடம் என்று மாறிவிடும்

ஆ! இந்த ரகசியத்தை அறியாதவனே!
இச்சைகளின் வலையில் சிக்கிக் கிடப்பவனே!

அவலமே! உன் மறதி!
உன் விழி பருப்பொருளின் கைதி!
மகத்துவம் உன்னை அலங்கரித்தது
நீயோ இன்று உலகின் இரவலன்!

நீ உன் அகமியத்தை அறிந்தவன் ஆகிவிட்டால்
கதியற்றோன் அல்ல நீ
பாவியும் அல்ல நீ”

இக்கவிதையில் இரண்டு பேரின் உரை இருக்கின்றது. ஒன்று மனிதனின் பேச்சு. மற்றொன்று இயற்கையின் பேச்சு. மனிதன் இயற்கையை வியக்கின்றான். ஆனால் இயற்கை மனிதனை வியக்கின்றது.


”உன் ரோஜாவும் ரோஜாத் தோட்டமும்
சொர்க்கத்தின் சித்திரங்களாய் உள்ளன
இவை அனைத்தும்
’வஷ்ஷம்ஸ்’ அத்தியாயத்தின் விளக்கங்களாய் உள்ளன”
(குல் ஒ குல்ஸார் தேரே ஃகுல்த் கி தஸ்வீரே(ன்) ஹை(ன்)
எ சபீ சூராயெ வஷ்ஷம்ஸ் கி தஃப்சீரே(ன்) ஹை(ன்))
என்று மனிதன் இயற்கையைப் பார்த்துக் கூறுகின்றான். சூரா அஷ்-ஷம்ஸ் (சூரியன்) என்பது திருக்குர் ஆனின் 91-வது அத்தியாயம் ஆகும். அதன் முதல் வசனம்,
”சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக”
(வஷ்ஷம்ஸி வள்ளுஹாஹா -91:1)
என்று சூரியனைப் பற்றிக் குறிப்பிடுவதால் அதற்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி அது சூரியனின் சிறப்புக்களைப் பேசும் அத்தியாயம் அல்ல!

அதாவது, இவ்வுலகம் சூரியனின் விளக்கம் என்பதாக மனிதன் பார்க்கிறான். ஆனால் இயற்கை அவனைப் பார்த்துச் சொல்கிறது:
”அழகின் கூட்டம் நீ
நான் உன் நிழற்படம்!
காதலின் வேதம் நீ
உன் விளக்கவுரை நான்!”
(அஞ்சுமன் ஹுஸ்ன் கீ ஹே தூ தேரீ தஸ்வீர் ஹூ(ன்) மெய்(ன்)
இஷ்க் கா தூ ஹே ஸஹீஃபா தேரீ தஃப்சீர் ஹூ(ன்) மெய்(ன்))


சூரியனின் ஒளியை மனிதன் வியக்கிறான். ஆனால் அவ்வொளி அவனின் இருண்ட அகத்தை வெளிச்சமாக்கவில்லை. எனவே அகமிய ஒளியை விட்டும் தான் தூரமாக இருப்பதை அவன் உணர்கிறான்:
“ஒளியை விட்டும் தொலைவாக
இருளின் கைதியாய் இருக்கின்றேன்”
(நூர் சே தூர் ஹூ(ன்) ழுல்மத் மே(ன்) கிரஃப்தார் ஹூ(ன்) மெய்(ன்))

இவ்வாறு கவலைப் படும் மனிதனுக்கு அவனது அகமிய எதார்த்தம் (ஹகீக்கத்) என்ன என்பதை இயற்கை அவனிடம் சொல்கிறது:
”என் இருப்போ
சூரிய ஒளியின் யாசகன்
அந்தச் சூரியனின் தேவை இன்றி
ஒளி வீசுபவன் நீ!”
(நூரே ஃகுர்ஷீத் கீ முஹ்தாஜ் ஹே ஹஸ்தீ மேரீ
அவ்ர் பே மின்னத்தெ ஃகுர்ஷீத் ச்சமக் ஹே தேரீ)

அது மட்டுமல்ல, இன்னும் ஒருபடி மேலாகச் சொல்கிறது:
”என் இருப்பும் தோற்றமும்
உன் ஒளியைச் சார்ந்தே உள்ளன”
(ஹே தேரே நூர் சே வாபஸ்தா மேரீ பூத் ஒ நுமூத்)

அதாவது, மனிதன் இறைவனின் பிரதிநிதி (ஃகலீஃபத்துல்லாஹ் -2:30) ஆவான். இந்த அந்தஸ்த்து வேறு எந்தப் படைப்புக்கும் அருளப்படவில்லை. மனிதன் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது பற்றித் திருக்குர்ஆன் சொல்கிறது:
”நிச்சயமாக வானங்களையும் பூமியையும் மலைகளையும்
பொறுப்பைச் சுமந்து கொள்ளுமாறு முன்வைத்தோம்
ஆனால் அவை அதனைச் சுமக்க மறுத்தன
அதைப் பற்றி அவை அஞ்சின
ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்
நிச்சயமாக மனிதன்
அநியாயக்காரனாகவும் அறிவிலியாகவும் இருக்கிறான்”
(33:72)

இவ்வசனத்தின் கருத்தினையே மனிதனிடம் இயற்கை இவ்வாறு கூறுவதாக அல்லாமா இக்பால் பாடுகிறார்:
“என்னால் இயலாத சுமையைத்
தோளில் ஏற்றவன் நீ”
(பார் ஜொ முஜ் சே ந உட்டா வொ உ(ட்)டாயா தூனே)

மேற்படி வசனத்தில் மனிதனின் நிலை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,
நிச்சயமாக மனிதன் அநியாயக்காரனாகவும் அறிவிலியாகவும் இருக்கிறான்” (இன்னஹூ கான ழலூமன் ஜஹூலா -33:72) என்று சொல்லியிருப்பதன் கருத்து மனிதன் இறைவனை அறியாமல் இருக்கும் நிலை என்பதுதான்.

ஏனெனில், “இன்னும் ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை” (மா ஃகலக்துல் ஜின்ன வல் இன்ச இல்லா லியஃபுதூன் -51:56) என்னும் திருவசனத்திற்கு நபித்தோழர் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என்னை வணங்குவதற்காகவே அன்றி... – அதாவது என்னை அறிவதற்காகவே அன்றி...” (இல்லா லியஃபுதூன் அய்யு இல்லா லியஃரிஃபூன்) என்று விளக்கம் தந்தார்கள். எனவே மனிதன் அநியாயக்காரன் ஆவது அவன் இறைவனை அறியாத மடையனாய் இருப்பதனால்தான் என்பது தேற்றம். எனவேதான் அநியாயக்காரனாகவும் என்பதுடன் அறிவிலியாகவும் என்பதும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனத்தில் மனிதர்களுக்கு முன் ஜின்கள் குறிப்படப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. அது ஏன்? ஆனால் வானவர்கள் (மலாஇக்) பற்றி இங்கே குறிப்பிடப்படவில்லை. இறைவனை அறியாததால் அநியாயம் (ழுல்ம்) உண்டானது முதலில் ஜின் இனத்தில்தான். அதுவும் மனிதனை வைத்து!

இப்லீஸ் என்னும் ஷைத்தான் எப்படி அநியாயக்காரன் ஆனான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவன் முதல் மனிதரான ஆதம் நபிக்குச் சிரம் சாய்க்காத (சஜ்தா செய்யாத) காரணத்தினால் இறைநெருக்கத்தை இழந்து, இறைநிராகரிப்பாளனாக ஆனதை எண்ணிப் பார்க்கவும்.
“அது சமயம் வானவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள்;
இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக
நிராகரிப்பாளர்களில் ஒருவன் ஆகிவிட்டான்”
(ஃபசஜதல் மலாஇகத்து குல்லுஹும் அஜ்ம்ஊன்; இல்லா இப்லீஸ்; இஸ்தக்பர வ கான மினல் காஃபிரீன் -38:73,74)

இறை நிராகரிப்பு (குஃப்ரு) மற்றும் இணைவைப்பு (ஷிர்க்) ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு உண்டு. இதில் அதுவும் அதில் இதுவும் இருப்பதைப் பற்றி நுட்பமான விளக்கங்கள் மார்க்க அறிஞர்களால் செய்யப்பட்டுள்ளன. இங்கே நாம் கவனிக்க வேண்டியது இணைவைப்பு என்பது அநியாயம் என்பதிலும் அடங்கியது என்பதாகும்.
”நிச்சயமாக இணைவைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்” (இன்னஷ் ஷிர்க்க லழுல்முன் அழீம் -31:13)

இறைவனை அறியாத காரணத்தினால் நிராகரிப்பும் இணைவைப்பும் உண்டாகின்றன. ஆதம் நபிக்குச் சிரம் பணிய இப்லீஸ் மறுத்தது ஏன்? அவனே ஒரு காரணம் சொல்கிறான்: “’நானே அவரை விட மேலானவன்; என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்’ என்று கூறினான்” (கால அனா ஃகைரும் மின்ஹு; ஃகலக்தனீ மின் நாரின் வ ஃகலக்தஹூ மின் தீன் -38:76)

இப்லீஸ் இறைவனை வெளிப்படையாக அறிந்தவனாகத்தான் இருந்தான். ஆனால் அவன் மனிதனின் அகமியம் என்ன என்பதை அறியவில்லை. மனிதனின் மூலப்பொருள் களிமண் என்பது வரைதான் அவனது அறிவு எட்டுகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள அந்தரங்கத் தொடர்பினை அவன் அறியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவனுக்குத் தன் அகமியம் என்ன என்பதே தெரியவில்லை. அதனால்தான் தன் மூலப்பொருள் நெருப்பு என்பது வரை மட்டுமே அவனின் அறிவு செல்கிறது. நெருப்பு, களிமண் ஆகியவை சுயமாகத் தோன்றிய சுயம்புகள் அல்ல. அவை பூர்வீகப் பொருட்களும் (கதீம்) அல்ல. எனவே அவற்றின் மூலம் எது என்பதைப் பற்றிய ஞானம் அவனிடம் இல்லை.

அதாவது, இப்லீஸ் தன் அகமியத்தைப் பொருத்தவரை அறிவிலியாக இருந்தான். மனிதனின் அகமியத்தைப் பொருத்தவரை அறிவிலியாக இருந்தான். எனவே அல்லாஹ்வின் விஷயத்திலும் அறிவிலி ஆகிவிட்டான். அதனால் அவனில் அநியாயம் விளைந்தது.

இறைவனை அறிய வேண்டிய இரு நிலைகள் உள்ளன. ஒன்று தன்ஸீஹ். மற்றொன்று தஷ்பீஹ்.

தன்ஸீஹ் என்பது இறைவனின் தனித்த நிலை. அதாவது, படைப்புக்களை விட்டும் அப்பாலாகி இருக்கும் நிலை.

தஷ்பீஹ் என்பது இறைவன் படைப்புக்களுடன் இருக்கும் நிலை. அவன் எவ்வாறு படைப்புக்களுடன் இருக்கிறான் என்று அறிவதே தஷ்பீஹ் பற்றிய ஞானம் ஆகும்.

இப்லீஸிடம் இருந்தது தன்ஸீஹ் நிலையில் இறைவனைக் காணும் அறிவு மட்டுமே. அவனிடம் தஷ்பீஹின் அறிவு இல்லை. அதாவது, அல்லாஹ் ஆதமுடன் எவ்வாறு இருக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

இவ்விரு நிலைகளிலும் இறைவனை அறிந்தவரிடமே ஏகத்துவத்தின் அறிவு (இல்முத் தவ்ஹீத்) இருக்கின்றது. இரண்டில் ஒன்று மட்டும் இருப்பது ஆபத்து.

அதாவது, தன்ஸீஹ் நிலையில் மட்டுமே இறைவனை அறிந்தவன் படைப்புக்களில் அல்லாஹ் இல்லை என்று சொல்லி குஃப்ரு என்னும் நிராகரிப்பில் ஆகிவிடுகிறான். இப்லீஸ் அப்படித்தான் காஃபிர் ஆனான்.

தஷ்பீஹ் நிலையில் மட்டுமே இறைவனை அறிபவன் இறைவன் படைப்புக்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்னும் நிலையை அவன் மீது கற்பனை செய்வதால் இணைவைப்பில் ஆகிவிடுகிறான். அதாவது இடப் பரிணாமங்களில் இறைவனை மட்டுப்படுத்தி அவனையும் ஒரு படைப்புப் பொருளைப் போல் பாவிக்கின்றான். இதன் நீட்சியாக, இறைவனும் படைப்பும் ஒன்றே என்னும் இணைவைப்பும் உண்டாகி விடுகிறது.

இவ்விரு நிலைகளையும் பற்றி மகாஞானி இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:
“தன்ஸீஹில் மட்டும் இறைவனை விளங்கினால்
அவனை நீ கட்டுப்பட்டவன் என்று விளங்கிவிட்டாய்
தஷ்பீஹில் மட்டும் இறைவனை விளங்கினால்
அவனை நீ மட்டுப்பட்டவன் என்று விளங்கிவிட்டாய்
இரண்டு குறிப்புக்களிலும் அவனை நீ அறிந்து கொண்டால்
ஞானிகளின் தலைவனும் வழிகாட்டியும் ஆவாய்”
(வ இன் குன்த பித்தன்ஸீஹி குன்த முகய்யிதா
வ இன் குன்த பித்தஷ்பீஹி குன்த முஹத்ததா
வ இன் குன்த பில்அம்ரைனி
குன்த இமாமல்லில் ஆரீஃபீன வ சய்யிதா)

அல்லாமா இக்பாலின் கவிதையில் மனிதன் இயற்கையிடம் கேட்கிறான்:
”ஒளியை விட்டும் தொலைவாக
இருளின் கைதியாய் இருக்கின்றேன்
நான் ஏன் இத்தனைப் பரிதாபமாய்,
கதியிலியாய், பாவியாய் இருக்கின்றேன்?”


இயற்கை கூறும் பதிலில் மனிதன் தன் அகமிய நிலையை மறந்து, அதனால் இறைஞானமும் இன்றி அகக்குருடனாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இக்பால்:
“அவலமே! உன் மறதி!
உன் விழி பருப்பொருளின் கைதி!
மகத்துவம் உன்னை அலங்கரித்தது
நீயோ இன்று உலகின் இரவலன்!”
(ஹாயே கஃப்லத் கெ தேரீ ஆன்ஃக் ஹே பாபந்தெ மஜாஸ்
நாஸ் ஸீபா தா துஜே தூ ஹே மகர் கர்மெ நியாஸ்)

இந்நிலைதான் இப்லீஸை வழிதவற வைத்தது. அவனின் பார்வை ‘பாபந்தெ மஜாஸ்’-ஆக (பருப்பொருளின் கைதியாக) இருந்தது. அதாவது, தன்னுடலின் மூலமான நெருப்பு மற்றும் ஆதம் நபியது உடலின் மூலமான மண் ஆகிய பருப்பொருட்களைத் தாண்டி அவனின் பார்வை செல்லவில்லை.

முதல் மனிதனின் மகத்துவம் எது? வானவர்கள் அனைவரும் அவனுக்கு அடிபணிந்ததாகும். ஆனால் இன்று அம்மனிதன் உலகின் இரவலனாக அதாவது பருப்பொருளின் இரவலனாக இருக்கிறான். இப்லீஸ் தன்னுடைய குறைப் பார்வையை மனிதனிடம் உண்டாக்கி அவனைப் பருப்பொருளின் கைதியாக்கி விடுகிறான். எப்படி எனில், ஆதமுக்கு அவன் சிரம் பணிய மறுத்து இறைவனிடம் வாதாடி தண்டனையும் அவகாசமும் பெற்ற பின்னர் அவன் இவ்வாறு சொன்னான்:
“என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால்
இவ்வுலகில் அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படிச் செய்து
அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன்;
அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள
உன் நல்லடியார்களைத் தவிர”
(கால றப்பி பிமா அக்வைத்தனீ லஉஸய்யினன்ன லஹும் ஃபில் அர்ளி வ லஉக்வியன்னஹும் அஜ்மஈன்; இல்லா இபாதக்க மின்ஹுமுல் முஃக்லஸீன் – 15:39,40)

’இவ்வுலகில் அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படிச் செய்து’ என்று அவன் சொன்னதன் கருத்து, இவ்வுலகப் பொருட்கள் இறைவனை மறைக்கும் திரையாக அவர்களுக்கு ஆகிப்போகுமாறு செய்தல் என்பதுதான். பிறகு அவர்கள் இவ்வுலகின் பொருட்களைக் காண்பார்கள் ஆனால் இறைவனின் பிரசன்னத்தை அதில் காண மாட்டார்கள். எனவே வெளியுலகம் சுயமே இயங்குவதாகக் கருதும் நிலை அவர்களிடம் உருவாகும். படைப்புக்களுக்குச் சுயத்தன்மையைச் சாற்றிவிடுவார்கள். இந்நிலையில்தான் பல்கீஸ் அரசியையும் அவர்களின் கூட்டத்தையும் இப்லீஸ் (ஷைத்தான்) ஆக்கியிருந்ததாக சுலைமான் நபியிடம் ஹுத்ஹுத் (கொண்டலாத்தி) பறவை கூறிற்று:
”அவளும் அவளுடைய சமூகத்தினரும்
அல்லாஹ்வை அன்றி
சூரியனுக்குச் சிரம் பணிவதை நான் கண்டேன்
அவர்களுடைய செயல்களை
அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து
அவர்களை நேரான வழியில் இருந்து தடுத்துள்ளான்
ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை”
(27:24)

மனிதர்களை வழி கெடுப்பேன் என்று இப்லீஸ் போட்ட சபதத்தில் “அந்தரங்க சுத்தியுள்ள உன் நல்லடியார்களைத் தவிர” (15:40) என்று சொல்லியிருக்கிறான். அகத்தூய்மையாளர் (முஃக்லிஸீன்) என்பவர்கள் அகத்தூய்மை (இஃக்லாஸ்) உள்ளவர்கள். திருக்குர்ஆனின் 112-வது அத்தியாயத்திற்கு ‘சூரத்துல் இஃக்லாஸ்’ என்றும் ‘சூரத்துத் தவ்ஹீத்’ என்றும் பெயர்கள் உண்டு. இஃக்லாஸ் (அகத்தூய்மை) என்பது தவ்ஹீதின் ஞானம்தான் (இல்முத் தவ்ஹீத்).

இப்லீசிடம் தவ்ஹீதின் ஞானம் இல்லாமல் போனதால்தான் அவன் வழிகெட்டுப் போனான் என்பது இதனால் விளங்கும். எனவேதான் இஃக்லாஸ் – தவ்ஹீத் எவரிடம் இருக்கிறதோ அவர்களை அவனால் வழிகெடுக்க இயலாது என்று அவனே கூறுகிறான்.

இப்லீஸிடம் இருந்த இறைஞானம் ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்) அல்ல. அது இருந்திருந்தால் அவன் வழிகெட்டுப் போயிருக்க மாட்டான். அல்லாஹ் ஒருவன் (வாஹித்) என்பது அவனுக்குத் தெரியும். அல்லாஹ்தான் ரட்சகன் (றப்) என்பதும் அவனுக்குத் தெரியும். அல்லாஹ்தான் வணக்கத்திற்குரிய தெய்வம் (இலாஹ் – மஃபூத்) என்பதும் அவனுக்குத் தெரியும். எனினும் இவ்வறிவுகள் மட்டுமே ஏகத்துவ ஞானம் ஆகப் போதுமானவை அல்ல.

அதாவது தன்ஸீஹ் என்னும் நிலையில் அல்லாஹ்வை இப்லீஸ் அறிந்து வைத்திருந்தான். ஆனால் அது மட்டும் ஏகத்துவ ஞானம் என்னும் நிலையை எட்ட முடியவில்லை. தஷ்பீஹின் நிலையில் அல்லாஹ்வை அறியும் அறிவு இப்லீசிடம் இருக்கவில்லை. எனவே அவன் வழிகெட்டுப் போனான்.

ஆக, ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்) என்பது அல்லாஹ்வை தன்ஸீஹ் தஷ்பீஹ் ஆகிய இரு நிலைகளிலும் அறிவதுதான்.

அல்லாமா இக்பாலின் மேற்படிக் கவிதையில் வரும் மனிதன் தன் அகமியத்தை அறியாதவனாக இருக்கிறான். இறைஞானம் அவனிடம் இல்லை. இப்லீஸின் நிலையில் அவன் இருக்கிறான். எனவே அவன் இருளின் கைதியாய் இருக்கிறான். இத்தகைய மனிதனின் நிலை பற்றித் திருக்குர்ஆன் சொல்கிறது:
“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்”
(இன்னல் இன்சான லஃபீ ஃகுஸ்ர் – 103:2)

இந்த நஷ்டநிலை, ’ழலூமன் ஜஹூலா’ – அநியாயக்கார அறிவிலி என்னும் நிலை மாறவேண்டும் எனில் இறைஞானம் அவசியம். அந்த இறைஞானம் தன்ஸீஹ் நிலையில் மட்டுமல்லாது தஷ்பீஹ் நிலையிலும் இறைவனை அறிவது கொண்டு உண்டாகும். அதற்குத் தன் அகமியத்தை அறிவது அவசியம். இதனையே இயற்கை மனிதனுக்குச் சொல்வதாக இக்பால் இவ்வாறு பாடுகிறார்:
”நீ உன் அகமியத்தை அறிந்தவன் ஆகிவிட்டால்
கதியற்றோன் அல்ல நீ
பாவியும் அல்ல நீ”


”மனிதன் என் ரகசியம். நான் அவனின் ரகசியம்” (அல்-இன்சானு சிர்ரீ வ அனா சிர்ரஹூ) என்பது இறைவாக்கு (ஹதீஸ் குத்ஸி).

இந்த அகமிய ஞானத்தைப் பெறும் வழியாகத்தான் “தன்னை எவன் அறிந்தானோ அவன் தன் இறைவனை அறிந்தான்” (மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு) என்று சொல்லப்பட்டது.

மனிதன் தன் அகமியத்தை அறியும் வரை இவ்வுலகம் அவனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஹழ்றத் அலீ (ரலி) சொன்னார்கள்: “பார்ப்பதற்குச் சிறிய பிரபஞ்சம் (ஆலமுல் அஸ்கர்) என்று தெரிகின்றாய் நீ. உண்மையில் பெரிய பிரபஞ்சம் (ஆலமுல் அக்பர்) நீயே!”

மனிதனின் இந்த மேன்மையான நிலையின் ரகசியங்கள் தெரியவரும்போது இவ்வுலகம் உண்மையில் அவனை அடைத்து வைத்துள்ள ஒரு சிறைச்சாலதான் என்பதைக் கண்டுகொள்வான். ”இவ்வுலகம் இறைநம்பிக்கையாளனுக்குச் சிறைச்சாலை” (அத்துன்யா சிஜ்னுல் முஃமின்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதை விளங்கிக் கொள்வான்.

மனிதனுக்கு வானவர்கள் சிரம் பணிந்தார்கள் என்பதில் பிரபஞ்சமே அவனுக்குச் சிரம் பணிந்த நிலை இருக்கிறது. இந்த நிலை நபிமார்களின் எதார்த்தமாக இருக்கின்றது. யூசுஃப் நபி தன் தந்தையான யஃகூப் நபியிடம் சொன்னதைக் கவனிக்கவும்:
“யூசுஃப் தன் தந்தையாரிடம்:
‘என் அருமைத் தந்தையே!
பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும்
எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே
நான் கண்டேன்’ என்று கூறியபொழுது...”
(இத் கால யூசுஃபு லிஅபீஹி யாஅபதி இன்னீ ரஐத்து அஹத அஷர கவ்கபன் வஷ்ஷம்ச வல்கமர ரஐத்துஹும் லீ சாஜிதீன் -12:4)                                          

மனிதன் இறைவனின் பிரதிநிதி. நபிமார்கள் மனிதர்கள். மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் உன்னதமான ஒரு நிலை வழங்கப்பட்டுள்ளது. அந்த நபிமார்களின் நெஞ்சம் சுமந்த ஏகத்துவ இறைஞானத்தை மனிதன் அடைந்தால் அவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் தலைசாய்த்துக் கொண்டிருக்கமாட்டான். மாறாக, சூரியனும் சந்திரனும் அவனுடைய அகமியத்திற்கும் கட்டுப்பட்டதாக மாறிவிடும்.
“நிச்சயமாக அல்லாஹ்
வானங்களில் உள்ளவற்றையும்
பூமியில் உள்ளவற்றையும்
உங்களுக்கு வசமாக்கித் தந்திருக்கிறான் என்பதையும்
உங்கள் மீது புறத்திலும் அகத்திலும்
தன் அருட்கொடையை நிரப்பியுள்ளான் என்பதையும்
நீங்கள் காணவில்லையா?”
(அலம் தரவ் அன்னல்லாஹ சஃக்கர லகும் மா ஃபிஸ்ஸமாவாத்தி வ மா ஃபில் அர்ளி வ அஸ்பக அலைக்கும் நிஃமஹு ழாஹிரன் வ பாத்தினா -31:20)

பல்கீஸ் ராணிக்கு எழுதிய கடிதத்தில் மனிதனின் உன்னத நிலை என்ன என்பதை சுலைமான் நபி குறிப்புக் காட்டிவிட்டார்கள். “நிச்சயமாக இது சுலைமானிடமிருந்து வந்துள்ளது; நிச்சயமாக இது ‘அருளாளனும் கருணையாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’” (இன்னஹு மின் சுலைமான வ இன்னஹு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -27:30) என்று அவர்கள் தன்னை தஸ்மியா மந்திரத்திற்கு முன் நிறுத்திக் கூறியதில் ஆதம் நபி பெற்றிருந்த ’வானவர்கள் அடிபணியும் நிலை’ தனக்கும் இருப்பதாகக் காட்டிவிட்டார்கள். அந்நிலை இறைவன் வெளிப்படும் தலமாக (மழ்ஹரெ இலாஹி) மனிதன் இருக்கும் நிலை ஆகும்.

”எவர் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ
நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கே கீழ்படிகின்றார்”
(மன் யுதியிர் ரசூல ஃபகத் அதாஅல்லாஹ -4:80)
என்று நபி(ஸல்) அவர்கள் குறித்து திருக்குர் ஆன் விளம்பும் உன்னத நிலையில் சுலைமான் நபி தன்னைக் கண்டார்கள். எனவே அவர்கள் பல்கீஸ் அரசிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
“நீங்கள் என்னிடம் பெருமை அடிக்காதீர்கள்
முற்றிலும் வழிபட்டவர்களாக என்னிடம் வாருங்கள்”
(அல்லா தஃலூ அலய்ய வஃதூனீ முஸ்லிமீன் -27:31)

அகக்கண் தரிசனம் இல்லாத இப்லீசிடம் இருந்த ஒரு குணத்தை இங்கே சுலைமான் நபி சுட்டிக்காட்டியுள்ளார்கள்; பெருமை. இப்லீசைப் பற்றி அல்லாஹ் சொன்னான்: “அவன் பெருமை அடித்தவனாக காஃபிர்களில் ஆகிவிட்டான்” (அஸ்தக்பர வ கான மினல் காஃபிரீன் -38:74)

இவ்வாறு சுட்டிக் காட்டியதன் மூலம் சுலைமான் நபி தன் ஆன்மிக அந்தஸ்த்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதாவது இறைத்தூதரிடம் பெருமையடிப்பவர்கள் ஷைத்தானின் மயக்கில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.

இறைத்தூதரிடம் பெருமை அடிப்பது அல்லாஹ்விடமே பெருமை அடிப்பதாகும்.
இறைத்தூதருக்கு அடிபணிவது அல்லாஹ்வுக்கே அடிபணிவதாகும்.

(தொடரும்) 

Tuesday, September 25, 2012

எறும்பின் கண் (தொடர்ச்சி-4)




இதுவரை நாம் ஆராய்ந்து வந்துள்ள விஷயங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் காண நினைத்தால் மனக்கண்ணின் முன் இருபதாம் நூற்றாண்டின் மாமேதைகளில் ஒருவர் வந்து நிற்கிறார். மகாகவி அல்லாமா இக்பால். அவர் காயத்ரி மந்திரத்தை உருதுவில் கவிதையாக மொழிபெயர்த்துள்ளார்!

பிராமண சிறுவர்கள் ஏழு வயதில் முப்புரிநூல் அணிந்துகொள்ளும் ‘உபநயனம்’ என்னும் சடங்கின்போது அவர்களுக்கு இம்மந்திரமும் அதன் விளக்கமும் கற்றுத் தரப்ப்பட வேண்டும் என்பது ஐதிஹ்யம்.


தன் முன்னோர்கள் காஷ்மீரின் பிராமணர்களான பண்டிட்கள் என்பதை மறவாத இக்பாலின் மனத்தில் இந்த மந்திரத்தின் உட்பொருளான மெய்ஞ்ஞானம் வெளிப்பாடு வேண்டி நின்றிருக்க வேண்டும். ”ஆஃப்தாப் – தர்ஜுமாயே காயத்ரி” (சூரியன்: காயத்ரியின் மொழிபெயர்ப்பு) என்னும் கவிதையாக அது உருவெடுத்தது. இக்பாலின் இக்கவிதை பிரெஞ்சுக் கவிஞர் தியோஃபைல் காத்தியர் எழுதிய ஒரு கவிதையில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது என்கிறார் எம்.ஏ.கே.கலீல். நான் தேடிப் பார்த்த அளவில் அந்த ஃபிரெஞ்சுக் கவிதை கிடைக்கவில்லை. இக்பால் கவிதையின் தமிழக்கம்:

“சூரியனே!
உலகின் உயிரும் உத்வேகமும் நீயே
பிரபஞ்ச வெளி எனும் பதிவேட்டின்
பதிவாளன் நீயே

உண்மையின் இன்மையின் தோற்றத்திற்கு
அடிப்படை நீயே
உள்ளமையின் தோட்டம் உன் மூச்சால்
பசுமையாய் உள்ளது இங்கே

பஞ்ச பூதங்களின் விளையாட்டு
நிலைத்துள்ளது உன்னைக் கொண்டே
ஒவ்வொரு பொருளிலும் வாழ்வின் கோரிக்கை
உன்னைக் கொண்டே

ஒவ்வொரு பொருளும் தரிப்பட்டுள்ளது
உன் பிரகாசத்தைக் கொண்டே
உன் இந்த ஜ்வலிப்பும் கீதமும்
வாழ்வின் பூரணம் ஆகும்

உலகிற்கு ஒளியூட்டும் சூரியன் நீயே
இதயமும் அறிவும் உயிரோட்டமும் ஞானமும்
உன்னைக் கொண்டே

சூரியனே! எமக்கு ஞான ஒளியை நல்கு!
அறிவின் கண்ணுக்கு
உன் சுடர்களால் ஒளியூட்டு!

உள்ளமையின் சபையை
வஸ்துக்களால் அலங்கரிப்பவன் நீ
மேலுலகிலும் கீழுலகிலும்
வசிப்பவர்களின் ரட்சகன் நீ

உயிருள்ள ஒவ்வொன்றிலும்
உன் நிறைமையே பிரதிபலிக்கிறது
பன்மலை அடுக்குகளில்
உன் திருக்காட்சியே உள்ளது

ஒவ்வொரு பொருளது உயிரின்
ரட்சகன் நீயே
ஒளிப் பிள்ளைகளின் பேரரசன் நீயே

உனக்கு ஆரம்பம் ஏதுமில்லை
உனக்கு முடிவும் ஏதுமில்லை
ஆதி அந்தம் எனும் எல்லைகள்
அற்ற விடுதலை உன் ஒளி”

இப்பாடல் மிகவும் விரிவான ஒன்று. இதன் ஆறாம் கண்ணியாய் வரும்,
”சூரியனே! எமக்கு ஞான ஒளியை நல்கு!
அறிவின் கண்ணுக்கு
உன் சுடர்களால் ஒளியூட்டு!”
(ஏ ஆஃப்தாப் ஹம் கொ ளியாயே ஷுஊர் தே
 ச்சஷ்மெ ஃகிரத் கொ அப்னீ தஜல்லீ சே நூர் தே)
என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.


இக்கவிதையில் அல்லாமா இக்பால் சூரியனைக் குறியீடாகக் கொண்டு இறைவனைப் பாடியிருக்கிறார் என்பதுதான் சரியான விளக்கமாக அமையும். வானத்தில் வட்டமிடும் சூரியனைத்தான் இவ்வாறு பாடியிருக்கிறார் என்று சொன்னால் அது குறியீட்டுப் பொருளின் மீது இறைத்தன்மையைச் சாற்றும் இணைவைப்பாக ஆகிவிடும். வெளிச்சூரியன் நம் புறக்கண்கள் காணும் வெளியுலகைத்தான் வெளிச்சமிடுகிறது. ஆனால் ”இதயமும் அறிவும் உயிரோட்டமும் ஞானமும் உன்னைக் கொண்டே” என்று சொல்லும் போது அது இறைவனைக் குறித்தே ஆகும். எனவே ”இறைவனே உள்ளமையின் சுடர்களைப் படைப்புக்களின் மீது தெளித்துக் கொண்டிருக்கும் சூரியன்” என்பதே இக்கவிதையின் சாராம்சம் ஆகும்.

இக்கவிதை நெடுக இறைவனைக் குறித்து சூஃபித்துவத்தில் கையாளப்படும் கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. ரூஹ் (ஜீவன்), கவ்ன் ஒ மகான் (பிரபஞ்சம், இடம்), உஜூத் (உள்ளமை), அதம் (இல்லாமை), நுமூத் (தோற்றம்), ஹஸ்தி (உள்ளமை), காயிம் (நிலைப்பாடு), தகாளா (கோரிக்கை), ஸபாத் (தரிப்பாடு), நூர் (ஒளி), தஜல்லீ (ஒளிச்சுடர்கள் –வெளிப்பாடுகள்), அவ்வல் (ஆதி) மற்றும் ஆஃகிர் (அந்தம்) ஆகிய சொற்களைக் கவனிக்கவும். இவை இறைவனைக் குறித்துச் சொல்லப்பட்டவை. சூரியனைக் குறித்து அல்ல. ஆனால் இச்சொற்களின் பின்னணியில் உள்ள இறைத்தத்துவங்கள் சூரியனைக் குறியீடாகக் கொண்டு விளக்கப்படுகின்றன.

”உயிருள்ள ஒவ்வொன்றிலும்
உன் நிறைமையே பிரதிபலிக்கிறது”
(தேரா கமால் ஹஸ்தியே ஜான்தார் மே(ன்))
என்னும் ஒற்றை வரியே இறைவனுக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள உறவைக் குறித்து சூஃபிகள் சொல்லும் முக்கியமானதொரு பாடத்தின் சாராம்சமாகும்.

அதாவது, சிருஷ்டிகளின் பண்புகள் ’சிஃபாத்தே நாக்கிஸ்’ (குறைப் பண்புகள்) என்று சொல்லப்படும். சவம், மடமை, நாட்டமின்மை, ஆற்றலின்மை, செவிடு, குருடு, ஊமை மற்றும் இல்லாமை ஆகியவை.

இறைவனின் பண்புகள் ’சிஃபாத்தே கமால்’ (நிறைப் பண்புகள்) என்று சொல்லப்படும். ஜீவன், அறிவு, நாட்டம், ஆற்றல், கேள்வி, பார்வை, பேச்சு மற்றும் உள்ளமை ஆகியவை.

படைப்புக்களின் குறைப் பண்புகளில் அவற்றை மறைத்துப் பரம்பொருளின் நிறைப் பண்புகளின் சுடர்கள் பிரதிபலிக்கின்றன. எனவே படைப்புக்கள் அப்பண்புகளைச் சுயமாகப் பெற்றிருப்பது போல் தோற்றம் அளிக்கின்றன.


வானில் வட்டமிடும் சூரியனையே நேரடியாகக் குறித்து இக்பால் எழுதிய ஒரு கவிதையுடன் மேற்கண்ட கவிதையை ஒப்பிடும்போது இக்கவிதை இறைவனைப் பற்றிய குறியீட்டுக் கவிதை என்பது விளங்கும். “ஆஃப்தாபெ ஸுப்ஹ்” (’வைகறைச் சூரியன்’ அல்லது ‘காலையிளம் பரிதி’) என்னும் தலைப்பில் அமைந்த அக்கவிதையைத் தமிழில் தருகிறேன். (’காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்’ என்று பாரதிதாசன் தன் ’அழகின் சிரிப்பு’ நூலைத் துவக்குகிறார். அதிலிருந்து இத்தலைப்பை மொழிபெயர்த்துக் கொண்டேன்.):

”மனிதனின் மதுக்கூடத்தின்
கண்ணியமற்ற கலவரத்தை விட்டும்
மேலுயர்ந்து இருக்கின்றாய் நீ
வான்சபையை அலங்கரிக்கும்
மதுக்கோப்பை நீ

வைகறை மணப்பெண்ணின்
காதில் ஆடும் வெண்முத்து நீ
கீழ்வானின் வளைந்த நெற்றியில்
ஒளிரும் அணிகலன் நீ

காலத்தின் தாளில்
இரவின் மைக்கறையை அழித்து விட்டாய்
பொய்ச் சின்னம் போல்
வானிலிருந்து நட்சத்திரம் அகற்றப்பட்டது

வானின் விளிம்பில்
உன் அழகு தோன்றும் போது
கனவு மதுவின் மயக்கம்
சட்டென்று கலைகிறது கண்களை விட்டு

பார்வைப் புலன் ஒளியால் நிறைகிறது
எனினும் உன் ஒளியோ
புறக் கண்களைத்தான் திறக்கின்றது

கண்கள் எதனைத் தேடுகின்றதோ
அந்தக் காட்சி வேண்டும்
அகத்தின் கண் எதனால் திறக்குமோ
அந்தப் பிரகாசம் வேண்டும்

விடுதலை வேட்கைகள்
நிறைவேறுவதில்லை இவ்வுலகில்
வாழ்க்கை முழுவதும் இங்கே
தளையிடப்பட்டுக் கிடக்கின்றோம்

உன் பார்வைக்கோ
மேலோரும் கீழோரும் ஒன்றே
அது போன்ற ஒரு பார்வையைப் பெற
எனக்கும்கூட ஆசைதான்!

பிறரின் துயர் மீது என் கண்கள்
கண்ணீரைப் பொழிவதாகட்டும்
தேச வேற்றுமைகளும்
கலாச்சார வேற்றுமைகளும் விட்டு
என் இதயம் விடுதலை ஆகட்டும்

நிற வேற்றுமையால்
என் நாவு கட்டப்பட வேண்டாம்
மனிதகுலமே என் இனமாகட்டும்
முழு உலகும் என் தேசமாகட்டும்

இயற்கை அமைப்பின் இனிய ரகசியம்
என் அகப்பார்வைக்குத் தோன்றட்டும்
என் சிந்தனை விளக்கின் புகை
விண்வெளிகளை அளக்கட்டும்

முரண்களின் முடிச்சுக்களைத் தேடுவது
என்னைப் பதற்றப் படுத்தாதிருக்கட்டும்
காதல் ததும்பும் அழகு
ஒவ்வொரு பொருளிலும் காட்சி ஆகுக

ரோஜாவின் இதழ்கள்
தென்றலால் சிதைக்கப்படும் எனில்
அதன் வலி
என் கண்களில் நீராகிக் கசிகின்றது

காதல் துடிப்பின் அக்கினித் துளி
என் இதயத்தில் இருக்கட்டும்
அதன் ஒளியில் இருக்கட்டும்
சத்தியத்தின் ரகசியச் சேதி
என் இதயம் எனதாய் இல்லாமல்
இறைவனின் கண்ணாடியாய் இருக்கட்டும்

பொதுநல நினைப்பால்
நிரம்பியிருக்கட்டும் என் சிரம்
ஏதேனும் லாப நோக்கினால் அல்ல

இவ்வுலகின் கொந்தளிப்புக்களில்
உனக்குப் பொறுமை இல்லை எனில்
பெருவிளக்கே!
அது உண்மையில் பெருமை அல்ல

உலகை அலங்கரிக்கும் உன் அழகை
நீயே அறியவில்லை ஆதலால்
மனிதனின் வாசலில் கிடக்கும்
ஒரு தூசிக்குச் சமமல்ல நீ!

வானவர்கள் அடிபணிந்த மனிதனின் ஒளி
இறைக்காட்சித் தேடலின் கதகதப்பாய் இருந்தது
ஆனால் நீயோ மறுநாளின் விடியலை
யாசித்துக் கொண்டிருந்தாய்

சத்திய ஒளிக்கான ஆசை
எங்கள் இதயத்தில் உள்ளது
இந்தப் பாழடைந்த இடத்தில்தான்
தேடலாசை என்னும் லைலாவின்
வீடு இருக்கின்றது

கடினமான முடிச்சை அவிழ்ப்பதில்
அடடா! என்ன பேரின்பம்!
எமது முடிவடையா முயற்சியில் உள்ளது
நூறு முடிவுகளின் பேரின்பம்!

உன் நெஞ்சம்
தேடலின் வேதனை அருளப்பட்டதல்ல
தெய்வீக ரகசியங்களைத் தேடுவதின்
அறிவுடையோன் அல்ல நீ”


அல்லாமா இக்பாலின் இக்கவிதை வானில் சுழன்று கொண்டிருக்கும் ஹீலியம் விளக்கான சூரியனை விளித்துப் பேசுகிறது. அதனை மனிதனின் மேன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

மனிதன் படைப்புக்களின் சிகரம் ஆனவன். ’அஷ்ரஃபுல் மஃக்லூக்காத்’ (படைப்புக்களில் சிறந்தவன்) என்னும் அந்தஸ்த்து வழங்கப்பட்டவன். அவனில் இருக்கும் ஆன்மிக விழிப்பு வேறு படைப்புக்களால் எட்ட இயலாத ஒன்று.

தன்னை அறியும் பேறும் அதனால் தன் இறைவனை அறியும் பேறும் கொடுக்கப்பட்டவன் மனிதன். அந்த ஆன்மிக ஞானத்தின் பிரகாசத்தின் முன் வானத்துச் சூரியனின் புற ஒளி ஒன்றுமே இல்லை என்கிறார் இக்பால்.

”உலகை அலங்கரிக்கும் உன் அழகை
நீயே அறியவில்லை ஆதலால்
மனிதனின் வாசலில் கிடக்கும்
ஒரு தூசிக்குச் சமமல்ல நீ!”
(அப்னே ஹுஸ்னெ ஆலம் ஆரா சே ஜோ தூ மஹ்ரம் நஹீ(ன்)
ஹம்சரெ யக் ஜர்ராயெ ஃகாக்கெ தரெ ஆதம் நஹீ(ன்))

இப்படிப்பட்ட சூரியனையா மனிதன் வணங்குவது? சூரியனுக்கே ஒளி தந்து கொண்டிருக்கும் பரம்பொருளை அல்லவா அவன் அறிந்து வழிபட வேண்டும்? இதுதான் சுலைமான் நபி (அலை) அவர்கள் பல்கீஸ் ராணிக்கு எழுதிய கடிதமும் உணர்த்துகின்றது.

இதைச் சொல்லும்போது எனக்கொரு சம்பவம் நியாபகம் வருகின்றது.


எம் பகுதிக்கு ஆயங்குடியில் இருந்து சூஃபி மகான் ஸுபூத்தி ஷாஹ் ஜமாலி அவர்கள் ஒருமுறை வருகை தந்திருந்தார்கள். அப்போது அந்த தியான சபையில் உரையாடலின் போது ஒருவரிடம் குரு அவருக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த மினரல் நீர் பாட்டிலைக் காட்டிக் கேட்டார்கள், “இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“கண்ணாலதான்”
“அதைப் பார்க்கும் முன் உங்கள் பார்வை எதன் மீது விழுகிறது?”
“…”
“அதைக் காட்டும் ஒளியின் மீது விழுகிறதல்லவா?”
“ஆமாம்”
“அதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் முதலில் நம் பார்வை பொருள்களைக் காட்டும் ஒளியின் மீதுதான் விழுகிறது. அதன் பின்னர்தான் அவ்வொளி காட்டும் பொருளின் மீது விழுகிறது. இப்போது உங்கள் பார்வை முதலில் விழும் ஒளி எது?”
“ட்யூப் விளக்கின் ஒளி”
“சரி. இப்போ ராத்திரியில் விளக்கின் ஒளி. வெளியே போனால் நிலவின் ஒளி. பகலில் என்றால் சூரியனின் ஒளி. இந்த ஒளியை எல்லாம் காட்டுவது எந்த ஒளி?”
“…”
“விளக்கு, நிலா, சூரியன் இவற்றின் ஒளியை எல்லாம் காட்டிக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் ஒளிதான். அதை நம் அகக்கண்ணால் பார்க்க வேண்டும். அதுதான் மஃரிஃபா (இறை ஞானம்)”

(தொடரும்)