Wednesday, July 9, 2014

தூக்கத்தை விடவும்...


வைகறை நேரத் தொழுகைக்கு ஒலிக்கும் அழைப்பில் மட்டும் சிறப்பாக ஓதப்படும் வரி: “அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்”

“தொழுகை தூக்கத்தை விடவும் மேலானது” என்பது இதன் பொருள்.

இது ஏன்? என்பதை நாம் அறிய வேண்டும்.

“தூக்கத்தில் மனிதன் இறைவனை மறந்திருக்கிறான். ஆனால் தொழுகையில் இறைவனை நினைக்கிறான். அதனால் தூக்கத்தை விடவும் தொழுகை மேலானது ஆகிறது. ஆனால், எவனது தொழுகையில் இறை நினைவு இல்லையோ அவனின் தொழுகை தூக்கத்தை விடவும் கீழானதுதான்.” என்று குருநாதர் பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

இன்னொரு கோணத்தில் இன்னொரு விளக்கத்தை நாம் அடைகிறோம். அது நம் மூளையின் இயக்கம் சம்பந்தப் பட்டது.

தூக்கத்திலும் விழிப்பிலும் நம் மூளை ஒரே நிலையில் இருப்பதில்லை. அதன் இயக்கம் நமது பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உண்மையில் மூளையின் செயல்பாடுகளையே நாம் “மனநிலை” என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். “மனம் (Mind) என்பதை அளந்து ஆராய்ந்து அறிய உடலில் நமக்குக் கிடைத்திருக்கும் கருவி மூளைதான்” என்கிறார் தீபக் சோப்ரா.

மூளையின் அதிர்வுகளை அளக்கும் முறை Electro Encephalo Gram (EEG) எனப்படுகிறது. அதன் கணக்குப்படி மூளையின் அல்லது மனத்தின் நிலைகளை மருத்துவ விஞ்ஞானிகள் இப்படிப் பட்டியலிடுகிறார்கள்:

காம்மா நிலை: நொடிக்கு 30 அதிர்வுகளுக்கும் மேல். இந்நிலை சிந்தனை வயப்பட்ட நிலையில் இருப்பது.

பீட்டா நிலை: நொடிக்கு 15 முதல் 30 அதிர்வுகள். இந்நிலை விழிப்பு சுதாரிப்பு ஆகியவற்றில் இருப்பது.

ஆல்ஃபா நிலை: நொடிக்கு 9 முதல் 14 அதிர்வுகள். இந்நிலை நிம்மதி ஓய்வு அமைதி தியானம் ஆகியவற்றில் இருப்பது.

தீட்டா நிலை: நொடிக்கு 4 முதல் 8 அதிர்வுகள். இந்நிலை கனவுள்ள உறக்கம் ஆழ்ந்த ஓய்வு ஆழ்நிலை தியானம் ஆகியவற்றில் இருப்பது.

டெல்டா நிலை: நொடிக்கு 1 முதல் 3 அதிர்வுகள். இந்நிலை கனவில்லா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது.

அதிகமாகச் சிந்திப்பதில் மூளை ஏன் விரைவாகச் சோர்வடைகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், தியானம் என்பது சிந்திப்பது அல்ல என்பதும் இப்போது தெரிகிறது அல்லவா?

அதிகமாகச் சிந்திப்பவர்களே அறிவாளிகள் அல்லது சிறந்த கவிஞர்களாக, விஞ்ஞானிகளாக, மெய்ஞ்ஞானிகளாக இருப்பார்கள் என்று நாம் நினைத்து வந்திருக்கிறோம். இதிலோ தியானம் என்பது அல்ஃபா அல்லது தீட்டா நிலையாகவும் சிந்தித்தல் என்பது காம்மா நிலையாகவும் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு முரணாகத் தோன்றலாம்.

நியூராலஜி (மூளையியலின்) ஆராய்ச்சிக் கண்டறிதல்கள் வேறு விதமாகச் சொல்கின்றன. அதிகமாகச் சிந்திப்பது ஒருபோதும் உங்களை மேனிலைக்கு இட்டுச் செல்வதில்லை என்று அவை கூறுகின்றன. மூட்டை நிறைய செல்லாத பணம் வைத்திருப்பவன் எப்படிப் பணக்காரன் அல்லவோ அதே போல். மாறாக மில்லியன் ரூபாய்க்கு ஒரு கிரெடிட் கார்ட் வைத்திருப்பவனைப் போல் ஆழமான அமைதியான மனநிலை உள்ளவர்களே மேனிலை அடைகிறார்கள்.

“மேதைகள் எல்லா நேரங்களிலும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்னும் பொதுக் கருத்துக்கு மாறாக அவர்களின் மனம் சராசரியை விடவும் அமைதியாகவும் தெளிவாகவும் உள்ளது” என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா.(நூல்: How To Know God, chapter #5: Strange Powers / Geniuses, Child Prodigies and Savants, p.222)

இஸ்லாம் என்றால் அமைதி வழி என்று பொருள். சலாம் என்றால் அமைதி என்று அர்த்தம். எனில், அந்த அமைதி வழியின் தொழுகை என்பது அமைதி நிலையில் நிகழ்வதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது தொழுகை என்பது ஆல்ஃபா நிலையில் அல்லது தீட்டா நிலையில் நிகழ்வதாக இருக்க வேண்டும்.

தொழுகைக்காக நீரால் அங்கசுத்தி (ஒளூ) செய்துகொள்கிறோம். மனதிற்குச் செய்யும் ’ஒளூ’ (Ablution) என்பது என்ன? உங்கள் மூளையின் அதிர்வுநிலையை ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் வைப்பது என்று சொல்லலாம்.

தியானம் என்பதிலும் உறக்கம் என்பதிலும் மூளை ஒரே அதிர்வு நிலையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியானால் உறக்கமும் தியானமும் ஒன்றுதானா? அல்லது இரண்டும் எப்படி வேறுபடுகின்றன? என்று கேட்கலாம். இரண்டையும் வேறுபடுத்துவது சுதாரிப்பு (alertness) அல்லது பிரக்ஞை (consciousness) ஆகும்.

”உறக்கத்தில் சுதாரிப்பு அல்லது பிரக்ஞை இல்லை. ஆனால் ஓய்வுநிலை (relaxation) இருக்கிறது. தியானத்தில் அதே ஓய்வுநிலையுடன் பிரக்ஞையும் இருக்கிறது” என்பார் ஓஷோ.

உறக்கத்தை விடவும் தொழுகை மேலான நிலை ஆவது இப்படித்தான். அதாவது உறக்கத்தின் ஓய்வு நிலையுடன் பிரக்ஞையும் இருக்கும் நிலையே தொழுகைக்கான நிலை. ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் இருந்து பிசகி உங்கள் மூளை பீட்டா அல்லது காம்மா நிலைக்குப் போய்விடும் எனில் நீங்கள் தொழுகையில் இல்லை என்று சொல்லிவிடலாம்!
விழிப்பிலும் தூக்கத்தின் முழுமையான ஓய்வு நிலையில் இருப்பது என்பது சாத்தியமா? என்று ஐயம் வருகிறதா? நம் மூளையோ தூக்கத்தில் கூட ஓய்வாக இருப்பதில்லை அல்லவா?

தொழுகையில் மட்டுமல்ல, விழித்திருக்கும் நேரம் முழுவதும் இதே ஓய்வு நிலையில், ஆனால் பிரக்ஞையுடன், இருப்பவர்கள் உண்டு. அதாவது ஐவேளை தொழுகைக்கு வெளியிலும் தொழுகையின் ‘நிலை’யில் இருப்பவர்கள் உண்டு.

”தம் தொழுகையின் மீது (எப்போதும்) நிலைத்திருப்போர்” (அல்லதீனஹும் அலா சலாத்திஹிம் தாயிமூன் – 70:23)

”ஞானத்தின் தலைவாசல்” என்று சூஃபிகள் போற்றும் ஹழ்றத் அலீ (ரலி) அத்தகைய நிலையில் உன்னதமான படித்தரத்தை அடைந்தவர்கள். அன்னாரின் தொடையில் அம்பு தைத்தபோது அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் தோழர்கள் அந்த அம்பினை உருவி எடுத்தார்கள்! அறுவை சிகிச்சைக்குத் தேவையான ஓய்வு நிலை. ஆனால் முழுமையான விழிப்புணர்வுடன்!

இத்தகைய நிலையில் இருக்கும் மனிதர்கள் யார்? அவர்கள் அந்த நிலையை எப்படி அடைந்தார்கள்? என்பதைப் பார்க்கலாம்.

மனிதனின் மனத்தை சஞ்சலப்படுத்தும் விஷயங்கள் என்று அச்சம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கூறலாம். என்ன ஆகுமோ என்னும் அச்சம். இப்படி ஆகிவிட்டதே என்னும் கவலை. இப்படி ஆகிவிடுமோ என்னும் அச்சம். இப்படி ஆகவில்லையே என்னும் கவலை. இவ்விரு விஷயங்களை விட்டும் விடுதலை அடைந்த ஒரு கூட்டத்தை குர்ஆன் அடையாளம் காட்டுகிறது:

”அறிந்துகொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா ஃகவ்ஃபுன் அலைஹி வ லா ஹும் யஹ்ஸனூன் -10:62)

அவர்களின் மனத்தை மட்டும் அச்சமும் கவலையும் தீண்டாதது எப்படி என்று கேட்கலாம்.
அவர்கள் கடவுளை அடைந்தவர்கள். தம் உள்ளே கடந்து கடவுளை அடைந்தவர்கள். இறைவனைத் தம் இதயத்தில் குடி வைத்தவர்கள்.


இறைவனை அச்சமும் கவலையும் தீண்டுவதில்லையே!

5 comments:

  1. why Rajneesh , photo in this post

    ReplyDelete
  2. ”உறக்கத்தில் சுதாரிப்பு அல்லது பிரக்ஞை இல்லை. ஆனால் ஓய்வுநிலை (relaxation) இருக்கிறது. தியானத்தில் அதே ஓய்வுநிலையுடன் பிரக்ஞையும் இருக்கிறது” என்பார் ஓஷோ.
    - மவ்லா, ரஜ்னீஷ் அல்லது ஓஷோ சொன்னது இந்த பதிவில் எடுத்தாளப்பட்டுள்ளதால் அவரது புகைப்படம்.. அதற்கு என்ன?

    ReplyDelete
  3. ரமீஸ் பிலாலி ஜி, உங்களுடைய பதிவுகள் அனைத்திற்கும் ஒரு content page எழுத வேண்டும் என்பது எனது ஆசை...

    ReplyDelete
  4. சிறந்த பதிவு ....

    ReplyDelete